பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படமும், அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா திரைப்படமும் ஒரே நாளில் திரைக்கும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் ‘பொன் மாணிக்கவேல்’. பிரபுதேவாவிற்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்தத் திரைப்படம், காவல்துறை அதிகாரிகளின் கொலை மற்றும் அதன் விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இறுதியாக நடித்த இந்தப்படத்தில் சூரி, சுரேஷ் மேனன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தத் திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். கடத்தல் மாஃபியாவின் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வசூல் வேட்டையில் வெல்லப்போவது மாஃபியா வில்லன்களா இல்லை பொன் மாணிக்கவேல் போலீஸா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
�,