வாழ்வில் குறிப்பிட்ட ஒரு நிலையை எட்டியபிறகு பணம், வீடு, சொத்து என எதுவும் முக்கியமானதல்ல எனும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அதுபோலவே, சினிமாவுக்குள் நுழைந்து ‘டாப்’ இடத்தில் சில காலம் அமர்ந்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதும், அதற்கு அதிக சம்பளம் வாங்குவதும் அலுத்துவிடுகிறது. நாம் மறைந்தாலும், நம்மை மறக்காமல் இருக்க ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஹீரோ இல்லாத படங்களில் நடிப்பது, மிகவும் போல்டான கேரக்டர்களில் நடிப்பது என தங்களது திரை வாழ்க்கையை மாற்றிக்கொள்வது நடிகைகளின் வழக்கம். மேலே கூறிய விதத்தில் தங்களது நடிப்புத் தொழிலை திசை திருப்பாத ஒரு நடிகைகூட தற்போதைய சினிமாவில் இல்லையா என்றால், அப்படி சொல்லிவிட முடியாது.
‘சினிமாவில் நடிக்க வந்த நான் ஒரு நிலைக்கு வந்த பிறகு தனி ஆளாக என்னால் வெற்றிபெற முடியும் என்ற நிலையிலும், என்னுடன் சேர்த்து பலரையும் வெற்றிபெற வைப்பதே என் தொழிலுக்கு நான் செய்யும் நேர்மை’ என்று கூறி இப்போது வரையிலும், நடிப்புக்கும், கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் பெரும்பான்மையாக நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். அவருக்கு, சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் டுஸாடஸ்’ கேலரியில் மெழுகு பொம்மையை வைத்து பெருமைப்படுத்துவதில் ஆச்சர்யமில்லை தானே.
2019ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில், மேடம் டுஸாடஸ் கேலரியில் தனது மெழு உருவத்தை காட்சிக்காக வைக்கும் தகவலை சோஷியல் மீடியா மூலமாக அறிவித்தார் காஜல் அகர்வால். அப்போதிலிருந்து அவரது மெழுகு உருவத்தைப் பார்க்க தென்னிந்திய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இதற்குக் காரணம், தென்னிந்தியாவிலிருந்து முதல் முதலாக மேடம் டுஸாடஸில் மெழுகு உருவம் வைக்கப்படும் நடிகையாக காஜல் அகர்வால் இருப்பது தான். இந்திய அளவில் மூன்றாவதாகவும் இவர் இருப்பதால், இவரைத் தெரியாத திரையுலகின் ரசிகர்கள் கூட இப்போது இவரது படங்களைத் தேடிப் பார்க்கின்றனர். அதில் முத்தாய்ப்பான ஒரு திரைப்படமாக இருப்பது, காஜல் அகர்வாலின் பெயரை பல வருடங்களுக்கும் சொல்லிக்கொண்டிருக்கப்போகும் மகதீரா திரைப்படம் தான். எனவே, அந்த மகதீரா திரைப்படத்தின் இருப்பையும் மேடம் டுஸாடஸில் ஏற்படுத்தியிருக்கின்றனர்.
காஜல் அகர்வாலின் மெழுகு உருவம் வைக்கப்படவிருக்கும் மேடம் டுஸாடஸில், செயற்கையான ஒரு நில அதிர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இது, மகதீரா திரைப்படத்தின் ஒரு காட்சியில் ராம்சரண் மேளம் வாசிக்கும் சத்தத்தில் நிலம் அதிர்ந்து, காஜல் அகர்வாலின் பழைய ஓவியத்தை வெளிக்கொணர்ந்து பூர்வ ஜென்ம நியாபகத்தை மீட்டுக்கொண்டுவரும் காட்சியின் மீள் உருவாக்கமாக இருக்கிறது.
இவ்வளவு ஏற்பாடுகளையும் சிங்கப்பூர் சென்று பார்வையிட்ட காஜல் அகர்வால், “ என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. குழந்தையாக இருந்ததிலிருந்து பலமுறை மேடம் டுஸாடஸில் இருக்கும் இந்த மெழுகு சிலைகளை பார்த்து ரசித்திருக்கின்றேன். இன்று என் சிலை இங்கு இடம்பெறப்போவதை நினைத்துப் பார்த்தால் வாழ்வின் உச்சநிலையை அடைந்துவிட்டதாகவே உணர்கிறேன்” என்று இன்ஸ்டாகிராமில் கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.
�,