பிப்ரவரி 21 அன்று இயக்குநர் பாரதிராஜா நடித்து, இயக்கிய மீண்டும் ஒரு மரியாதை, நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமான கன்னிமாடம், ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள காட்பாதர், குட்டி தேவதை, அருண் விஜய் நடித்துள்ள மாபியா ஆகிய படங்கள் வெளியானது. வெளியான ஆறு படங்களில் வியாபார முக்கியத்துவமிக்க படமாக மாஃபியா” மட்டுமே எதிர்பார்க்கப்பட்டது.
துருவங்கள் பதினாறு வெற்றிக்குப் பின் அப்படத்தின் இயக்குநர் நரேன் கார்த்திக் இயக்கியுள்ள, தடம் பட வெற்றிக்குப் பின் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த படம் மாஃபியா. தர்பார் படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் சார்பில் 5.50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் தமிழக உரிமை 4.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமை 4.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த வருடத்தில் முதலீட்டுக்கு இணையாக லாபம் கிடைத்த முதல் தமிழ் படம் மாபியா என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இப்படத்தின் தமிழக உரிமை வாங்கிய திருச்சி ஆவின் கார்த்திக் சினிமாவிற்கு புதிது என்பதால் வியாபாரம் செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக படம் வெளிவருவதற்கு முதல் நாள் மாலை 5 மணி வரை செங்கல்பட்டு ஏரியா உரிமை வியாபாரம் செய்வதில் தாமதம், தடுமாற்றம் இருந்தது. தமிழக உரிமையை 4.50 கோடி ரூபாய்க்கு வாங்கியவர்கள் 10 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்வதற்கு முயற்சி செய்தனர்.
மூன்று நாட்களுக்கு முன்பாக செங்கல்பட்டு ஏரியாவில் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்து முன்பதிவு தொடங்கப்படும். இது தமிழகம் முழுமைக்கும் படத்தின் ஓப்பனிங் சிறப்பாக அமைவதற்கு உதவி செய்யும். ஆனால், மாஃபியா படத்திற்கு ஜனவரி 20 மாலை 6 மணிக்கு மேல்தான் செங்கல்பட்டு ஏரியாவில் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் மாஃபியா படத்திற்கான ஓப்பனிங் மந்தமாகத் தொடங்கியது. இப்படத்திற்கு முதல் மூன்று நாட்களில் செங்கல்பட்டு, சென்னை பகுதிகளில் 2.75 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது. திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், வட ஆற்காடு, தென்னார்க்காடு பகுதிகளில் சுமார் 3.25 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ள இப்படத்தின் வெற்றி தோல்வி இந்தவார இறுதியில் தான் முடிவு செய்ய இயலும்.
தமிழ் சினிமாவில் லைகா தயாரிப்பில் வெளியான படங்களில் அந்நிறுவனத்திற்கு அதிகபட்ச லாபத்தை பெற்றுத் தந்த படம் “மாஃபியா” என்பது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை மூன்று இலக்க டிக்கெட் விற்பனையை எட்டிப் பிடிக்க முடியாமல் தடுமாறியதுடன், பல இடங்களில் பார்வையாளர்கள் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
ஆணவக் கொலைக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படம் என்று பாராட்டப்பட்ட கன்னிமாடம் பல இடங்களில் முதல் கட்சிக்கு பார்வையாளர் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. காட்பாதர், குட்டி தேவதை படங்கள் குறைவான திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இந்தப் படங்களுக்கு புறநகர் பகுதிகளில் பார்வையாளர் அதிகளவில் வரவில்லை. நகர்ப்புறங்களில், மால் தியேட்டர்களில் தயாரிப்பாளர்கள் தரப்பில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே இந்தப் படங்களை திரையிடுவதற்கு காரணமாக இருந்தது.
-இராமானுஜம்.�,”