�
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 753ஆக உயர்ந்துள்ளது.
இது சமூக பரவலாக மாறிவிடாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதத்தில் பல்வேறு பிரபலங்களும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை செலுத்தி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்துவரும் நிலையில் அதிகபட்சமாக நடிகர் பிரபாஸ் 4 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு மூன்று கோடி ரூபாயும், தெலங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், ஆந்திர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார்.
ஏற்கனவே நடிகர் பவன் கல்யாண், நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் தலா 1 கோடி ரூபாய், ராம் சரண் 70 லட்ச ரூபாய், நிதின் 20 லட்ச ரூபாய், வருண் தேஜ் 10 லட்ச ரூபாய் என நிதியுதவி அளித்துள்ள நிலையில் பிரபாஸ் நான்கு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
தனது படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்த பிரபாஸ் சில தினங்கள் முன்பு தான் இந்தியா திரும்பினார். கொரோனா அச்சம் காரணமாக நடிகர் பிரபாஸ் உட்பட படக்குழுவினர் அனைவரும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
மக்களின் நலனுக்காக நான்கு கோடி ரூபாய் வழங்கிய அவருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,