பொன்னியன் செல்வனின் மூன்றாவது ஷெட்யூலை துவங்க மணிரத்னம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற இவ்வேளையில், மெட்ராஸ் டாக்கீஸின் நிர்வாகத் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் படம் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அமரர் கல்கியின் வரலாற்றுப் புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் திரைப்படமாக எடுத்து வரும் மணிரத்னம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். ஏற்கனவே இரண்டு ஷெட்யூல்கள் முடிந்து, மூன்றாவது கட்டத்திற்கு செல்ல ஆயத்தமான வேளையில், கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக பரபரப்பாக இயங்கி வந்த படக்குழு ஓய்வில் உள்ளது. இதனால் இயல்புநிலை மீட்டெடுக்கப்படும்போது, இயக்குநர் மணிரத்னம் தொடக்கத்திலிருந்து ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிட் டே வெளியிட்ட செய்தியில், மணிரத்னமும் அவரது குழுவும், ஜூலை முதல் படப்பிடிப்பை துவங்க ஆலோசனை செய்து வருகிறது. 2021ஆம் ஆண்டு ரீலிஸுக்கு ஏற்றார் போல அனைத்தையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக அட்டவணைகளை மறுசீரமைத்து வருகிறது. படத்திற்காக விக்ரம், ஐஸ்வர்யா, கார்த்தி மற்றும் குழும நடிகர்களிடமிருந்து ‘பல்க்’ கால்ஷூட்களை பெறமுடியும் என்று மணிரத்னம் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். குறிப்பாக படப்பிடிப்பு ஒரே நேரத்தில் முடிக்கப்படவேண்டும். அனைத்தும் சரியாக நடந்தால், விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாவுடன் புதுச்சேரியில் படப்பிடிப்பு முதலில் துவங்கும். அதே சமயம், வெளிப்புற படப்பிடிப்புக்கு தேவையான அனுமதி கிடைக்காவிட்டால், அவர்கள் ஏ.வி.எம். ஸ்டுடியோஸில் அதற்கேற்றார் படம்பிடிக்க யோசித்தும் வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவலை மெட்ராஸ் டாக்கீஸ் நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “திரைத்துறையில் உள்ள மற்ற அனைவரையும் போலவே, படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதற்கும் நடிகர்களிடம் அவர்களின் தேதிகளைப் பற்றி பேசுவதற்கு நாங்களும் காத்திருக்கிறோம். அட்டவணைகளை ஒருங்கிணைப்பது கடினம் தான். ஆனால் அதற்கான வழியைக் கண்டுபிடிப்பது தானே எங்கள் வேலை” என்று கூறுகிறார். வரலாற்றுப் புனைவாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை அதிகம் நம்பியிருக்கிறது. இதனைக் குறிப்பிட்ட ஆனந்த், அடுத்த ஆண்டு ரிலீஸ் தேதிக்கு நாங்கள் தயாராக இருப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனந்த், “படத்தில் சமரசம் செய்ய எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. வெளியீட்டு தேதி குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவு இல்லை என்றாலும், அடுத்த ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெளியிடுவோம்” எனக் கூறியுள்ளார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”