தமிழக அரசியல் வரலாற்றில் தமிழ் இனம், தமிழ்மொழி உணர்வு என்பதை முன்னிலைப்படுத்தி 1967 முதல் இன்று வரை அரசியல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வியாபாரம், வசூல் நோக்கங்களுக்காக இயக்குநர்களும், நடிகர்களும் அதைப் பயன்படுத்திக் கொண்டதும் உண்டு. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய படங்களில் அதிகமான வாய்ப்பு பெற்றவர்கள் பிற மொழியைத் தாய்மொழியாக கொண்ட நடிகர் நடிகைகளே. இருந்தபோதும் அவரது தமிழ் உணர்வை அவரது பேச்சுகளில் முதன்மைப்படுத்த தவறியதில்லை.
இந்திய சினிமா இயக்குநர்களில் 80 வயதைக் கடந்த மூத்த இயக்குநர், தயாரிப்பாளர் பாரதிராஜா இன்னும் இளமை துள்ளலுடன் தமிழ் திரைப்பட வர்த்தக சபை அமைக்கப்பட்டு இயங்கவேண்டும் என்பதை மீண்டும் முன்மொழிந்து வலியுறுத்தி இருக்கிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளை திறக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சினிமா படப்பிடிப்புகளை தொடரவும் தமிழக அரசு இதுவரை அனுமதி தரவில்லை. இது சம்பந்தமாக தமிழக அரசிடம் முறையிடவும், அதற்கான முன் தயாரிப்புக்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் கலந்துகொண்ட பரஸ்பர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் இணையதள வழியாக அவரவர் இருந்த இடங்களில் இருந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதில் பேசிய இயக்குநர் பாரதிராஜா தமிழ் திரைப்பட துறைக்கு ‘வர்த்தக சபை’ அமைக்கப்பட வேண்டும் என பேசியிருக்கிறார். காரணம் ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தொடங்கப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பின் திரைப்படத் துறை சம்பந்தமான அமைப்புகள் அந்தந்த மாநிலங்களில் மொழி அடிப்படையில் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன.
தமிழ் சினிமா மட்டும் ‘தென்னிந்தியா’ என்பதை விடாமல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் 1999ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டையில் இருந்த நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சுமார் 150 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் ‘தமிழ் திரைப்பட வர்த்தக சபை’ தொடங்கப்பட்டது.
தலைவராக பாரதிராஜா, கௌரவ செயலாளர்களாக R.M.அண்ணாமலை, கோவை ஏரியா விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் தம்பித்துரை, பொருளாளராக திருச்சி ஸ்ரீதர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அப்போதைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.ஆர்.ஜி முதல் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொறுப்பில் இருந்த R.M.அண்ணாமலை மற்றும் அவரை சேர்ந்தவர்கள் இதில் முக்கியத்துவம் பெற்றுவிடக்கூடாது என அவர்களது போட்டியாளராக அன்று இருந்த அபிராமி ராமநாதன் மாற்று திட்டத்தை முன் எடுத்தார்.
தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் மறைந்த சிந்தாமணி முருகேசன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.ஆர்.ஜி. இருவரையும் ஓரிடத்தில் சந்திக்க வைத்து ஒரு மாலைக்குள் இருவரையும் நிற்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதுடன் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால் சேம்பர் தேவையில்லை என விவாதத்தை தொடங்கி வைத்து பாரதிராஜாவின் கனவு திட்டமான தமிழ் திரைப்பட வர்த்தக சபைக்கு முதல் நாளே நெருக்கடியை உருவாக்கினார். அதற்கு பின் வர்த்த சபை செயல்படாமல் போனது.
இருபத்தியொரு வருடம் கழித்து நேற்றைய தினம் நிறைவேறாமல் போன தனது கனவை நினைவாக்கி நிறைவேற்றித் தர தமிழ் திரைப்பட துறையினரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. சர்வதேச சினிமாவில் இந்திய அடையாளம், சாதனையாளர் பாரதிராஜாவின் கனவை தமிழ் திரையுலம் நிறைவேற்றுமா?
**-இராமானுஜம்**
�,”