இந்தியன் 2 படப்பிடிப்பில் நிறைய கற்றுக்கொண்டேன் என்றும், உடன் பணியாற்றுபவர்களின் திறன் நமது கலையையும் மெருகேற்றும் என்றும் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவ கார்த்திகேயனுடன் அயலான், பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களுடன் 4 படங்கள் என அடுத்தடுத்த படங்களின் ஒப்பந்தங்களால் 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் பிஸியாக வலம் வந்தவர் இவர். தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தலால் ஓய்வில் இருக்கும் இவர் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அதில், கமல்ஹாசன் மற்றும் ஷங்கருடன் பணிபுரிவது, இந்தியன் 2 பற்றிய அவரது அனுபவம் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரகுல் ப்ரீத், ஆஹா…அந்த அனுபவம் உண்மையிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது. என் தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே ஷங்கர் மற்றும் கமல் சார் போன்ற அற்புதமானவர்களுடன் நான் பணியாற்றுகிறேன். ஒரு துறையில் திறம்படச் செயல்படுபவர்கள் உங்களைச் சுற்றி இருக்கும்போது நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
அவர்கள் படப்பிடிப்பில் இருக்கும் விதம்; ஒரு காட்சியை அவர்கள் எவ்வாறு அணுகுவது என்று திட்டமிடும் விதம்; அதனை மெருகேற்றும் அழகு; எழுத்தில் ஒன்றாக இருப்பதை காட்சிக்கான அனைத்து மேம்பாடுகளுடன் செயலாற்றும் போது, அது வேறு ஒன்றாக மாறிவிடும் அற்புதம் என அனைத்துமே அங்கு கற்றல் தான்.
நான் ஒரு கலைஞராக என்னைப் பற்றியும், என் பணியில் நான் செய்ய வேண்டிய எல்லாவற்றை பற்றியும் கற்றுக்கொண்டேன். இந்தக் கற்றல் தன்னிச்சையாக நடந்து கொண்டிருந்தது. நீங்கள் பணிபுரியும் நபர்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கிறார்களோ, அதே அளவிற்கு அது உங்கள் மீதும் பாயும். அது உங்கள் கலையை மேம்படுத்தும்” என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**
�,”