மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவாக நலம் பெற வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பிரபலங்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலகத்தினரும், அவரது ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி.பியின் நெருங்கிய நண்பரும் பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை நேற்று இரவு வெளியிட்டுள்ளார்.
அதில், பாலு, சீக்கிரமா எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்று நாம் சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.
இறைவா 🙏🙏🙏 pic.twitter.com/SUTJDmE8mp
— Dhanush (@dhanushkraja) August 14, 2020
அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும்….. இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அது போன்றது உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நம் இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போது அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன்.
அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா…!” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
**தனுஷ்**
தயவு செய்து எஸ்.பி.பி சாருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்
**ஏ.ஆர். ரஹ்மான்
இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து லெஜெண்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். #SPBalasubrahmaniam தன் அருமையான குரலால் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார்.
**அனிருத்**
எஸ்.பி.பி. சார் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்.
**இயக்குநர் வெங்கட் பிரபு**
எஸ்பிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை பற்றிய வதந்திகளும் பரவி வருகிறது. இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, “தயவுசெய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். நம் அன்புக்குரிய எஸ்பிபி சார் விரைவில் குணமடையவும், திரும்பி வந்து நம்மை மகிழ்விக்கவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு காமெடி நடிகர் வடிவேலும், மனோபாலா, கிரிக்கெட் வீரர் அஸ்வின் என அனைத்து தரப்பினரும் எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதுபோன்று, எஸ்பிபிக்கு மருத்துவ உதவி செய்ய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்பிபி மகன் சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் எஸ்பிபி உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
**-கவிபிரியா**�,”