அரசியல் பிரவேசம் ஒரு பக்கம் பரபரப்பாக நடந்துவந்தாலும், ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்துக்கான பணிகளும் ஒரு பக்கம் வேகமாக நடந்துவருகிறது.
கபாலி, காலா, 2.0, பேட்ட மற்றும் தர்பார் படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் அண்ணாத்த. குஷ்பு, மீனா, கீர்த்திசுரேஷ், பிரகாஷ்ராஜ் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துவருகிறார்கள்.
முதல்கட்ட படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்படப்பிடிப்பில், படத்துக்கான பாதி ஷுட்டிங் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தவிர, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படத்துக்காக போடப்பட்ட செட் இன்னும் அப்படியே இருக்கிறது. இருப்பினும், கொரோனா காலமென்பதால், மீதி ஷூட்டிங்கை சென்னையில் நடத்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.
ஆனால் லாக்டவுனுக்குப் பிறகு, படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தும் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. கொரோனாவுக்கு தடுப்பூசி வந்ததும் படப்பிடிப்பை துவங்கலாம் என்று முன்னரே சொல்லியிருந்தார் ரஜினி. அதுமாதிரி, சிவாவுக்கும் கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தள்ளிப்போனால் நன்றாக இருக்கும் என்றே நினைத்தார். அப்போதுதான், சன்பிக்சர்ஸ் படப்பிடிப்பை டிசம்பருக்கு தள்ளிவைத்தது.
அதன்படி, டிசம்பர் 15ஆம் தேதி அண்ணாத்த படத்துக்கானப் படப்பிடிப்பு துவங்கலாம் என்று திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்நிலையில் தான், இயக்குநர் சிவாவின் தந்தை மரணமடைந்தார். அதனால் டிசம்பர் 15ல் துவங்க வேண்டிய படப்பிடிப்பு இன்னும் சில வாரங்கள் தள்ளிப்போவதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், ஜனவரிக்கு முன்பாகவே படப்பிடிப்பை துவங்கிவிடவேண்டும் என்பதே படக்குழுவின் திட்டம். இந்நிலையில் அரசியல் கட்சியைத் துவங்குவதற்கானப் பணிகளில் இருக்கிறார் ரஜினி. இதனால், படப்பிடிப்பு துவங்குவது எப்போது, எப்போது படம் முடியும், ரிலீஸ் குறித்த தகவல்களைத் தயாரிப்பு தரப்பான சன்பிக்சர்ஸ் நிறுவனத்தாலேயே கணிக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது.
**-ஆதினி**�,