செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பாகுபலி படத்துக்கு முன்னோடி ஆயிரத்தில் ஒருவன். பல கோடிகளில் பாகுபலியை தயார் செய்தார் ராஜமெளலி. ஆனால், சில கோடிகளில் செல்வா ஆயிரத்தில் ஒருவன் படத்தைக் கொடுத்திருப்பார்.
இப்படம் 2010ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பாக ஜனவரி 14ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நேரத்தில் பெரிதாக போகவில்லை. வசூலிலும் தோல்விப் படமாகவே பார்க்கப்பட்டது. விமர்சன ரீதியாக பெரிதாகக் கொண்டாடப்பட்டது.
செல்வராகவனின் புதுப்பேட்டை படம் போலவே, இதுவும் எதிர்காலத்தில் பெரிதாக கொண்டாடப்படும், பேசப்படும் என்று கணித்தார்கள் விமர்சகர்கள். அப்படியாக, ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பெருமை சேர்ந்திருக்கிறது.
இந்த புத்தாண்டுச் சிறப்பாக வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடவிருக்கிறார்கள். இப்படியான ஒரு விஷயத்தை திரையரங்க உரிமையாளர்களிடம் தயாரிப்புத் தரப்பிலிருந்து சொன்னதுமே செம குஷியாகிவிட்டார்களாம்.
தமிழகமெங்கும் சுமார் 60 திரையரங்குகளில் படம் வெளியாக இருக்காம். அதற்கான விளம்பரங்களை செய்துவந்தனர். நேற்று முன் தினம் படத்துக்கான முன்பதிவும் துவங்கியது. யாரும் எதிர்பாராத வகையில் நிறைய முன்பதிவுகள் நடந்திருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கிலும் 50 முதல் 100 புக்கிங் நடந்திருக்கிறதாம்.
கொரோனாவுக்குப் பிறகு தமிழ் படங்கள் பெரிதும் செல்ஃப் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு திரைத்துறைக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. இப்படம் மட்டுமல்லாது செல்வராகவன் இயக்கத்தில் 2006ல் வெளியான தனுஷின் புதுப்பேட்டை படத்தையும் டிசம்பர் 31ஆம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இதுவும் செல்வாவின் சிறந்த படைப்புகளில் ஒன்று. வெளியான நேரத்தில் ரசிகர்கள் புரியவில்லை என்று ஒதுக்கிவைத்தப் படம். இப்போது கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. ஒரு படைப்பாளியாகச் செல்வராகவனுக்கு நிச்சயம் பெருமைக் கொள்ளும் தருணமாகத்தான் இருக்கும்.
**-ஆதினி**�,