வடசென்னை, அசுரன் என தொடர் ஹிட்களைக் கொடுத்துவரும் வெற்றிமாறனின் கையில் இரண்டு படங்கள் இருக்கிறது. சூர்யா நடிக்கும் வாடிவாசல் மற்றும் சூரி ஹீரோவாக நடிக்கும் படம். இவ்விரண்டில், முதலில் சூரி படத்தைக் கையில் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.
சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் படமாக்கப்பட்டுவருகிறது. ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடித்துவிட இருக்கிறது படக்குழு. இந்தப் படத்தில் சூரிக்கு நாயகியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இவர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ.ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்தவர்.
இந்தப் படத்தில் சூரிக்கு இணையான ரோலில் பாரதிராஜா நடிக்க இருந்தது. ஆனால், சத்தியமங்கலம் காடுகளில் நிலவிவரும் கடும்குளிரின் காரணமாகப் படத்திலிருந்து விலகினார் இயக்குநர் இமயம். இந்நிலையில், அந்த கேரக்டருக்கு முதலில் கிஷோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியாக, விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றிமாறனின் வடசென்னை படத்திலேயே விஜய் சேதுபதி நடிக்க வேண்டியது. சில நாட்கள் படப்பிடிப்புக்கு வந்தபிறகு படத்திலிருந்து விலகினார் சேதுபதி. இந்நிலையில், வெற்றிமாறன் – விஜய் சேதுபதி கூட்டணி இந்தப் படத்தில் கைகூடியிருக்கிறது.
அடுக்கடுக்காக படங்களைக் கைவசம் வைத்திருக்கும் சேதுபதி, சில படங்களை பின் தள்ளிவிட்டு, வெற்றிமாறன் படத்துக்கு முன்னுரிமை கொடுத்து, படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக 10 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. சின்ன ரோல்தான் என்றாலும், க/பெ.ரணசிங்கம் படத்தில் எப்படி முழு படத்திலும் வருவதுபோல இருக்குமோ அந்த மாதிரி இந்தப் படத்திலும் கேரக்டர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தை வெற்றிமாறனே இயக்கி, தயாரிக்கிறார். படத்துக்காக விஜய் சேதுபதிக்கு சுமார் மூன்று கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எப்படியும் பத்து நாட்கள் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றால் ஒரு நாளைக்கு 30 லட்சம் வரை சம்பளம் வரும் எனக் கணக்கு வருகிறது. ஏன் இத்தனை பெரிய தொகை என்று விசாரித்தால், படத்தின் விஜய் சேதுபதியின் ரோல் அப்படியாம். அந்த ரோலின் வெயிட்டேஜைப் பொருத்து இந்த சம்பளத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.. அதோடு, சூரி படம் என்றால் பெரிதாகப் படம் விற்பனையாகுமா என்பது தெரியாது. ஆனால், விஜய் சேதுபதி நடித்திருப்பதால் பட விற்பனையிலும் கைகொடுக்கும் என்பதால் தான் இத்தனைப் பெரிய தொகையாம்.
**-ஆதினி**�,