கொரோனாவுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வெற்றி வாகை சூடுகிறதா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாக வருகிறது. தமிழில் எக்கச்சக்கப் படங்கள் நேரடியாக திரையரங்கில் வெளியான நிலையில், ஹிட் படங்களென்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான் மற்றும் தனுஷின் கர்ணன் படங்களே பெரிய வரவேற்பை பெற்றது. மற்றபடி, சின்ன பட்ஜெட் படங்களுக்கு பெரிதாக வசூலும் இல்லை. வரவேற்பும் இல்லை. இப்படியான சூழல் தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நிலவிவருகிறது. இருப்பினும், ஒரு படம் உலகளவில் ஆச்சரியத்தை நிகழ்த்தியிருக்கிறது.
வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’. கடந்த மார்ச் 26ஆம் தேதி உலகளவில் வெளியானது. இப்படம், இந்தியாவிலும் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வெளியான முதல் ஐந்து நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. கொரோனா காலக்கட்டத்தில் வெளியான படங்களில் உலகளவில் அதிக வசூல் செய்த படம் இதுதான். இதற்கு முன்பு வெளியான வொண்டர் வுமன் 1984, டாம் அண்ட் ஜெர்ரி படங்கள் கூட பெரிதாக வசூலில் சாதிக்கவில்லை.
இந்தியாவைப் போல உலகமெங்கும் திரையரங்க கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையிலும், காட்ஸில்லா வெர்சஸ் காங் படமானது அமெரிக்காவில் மட்டும் இதுவரை 365 மில்லியன் டாலர் வசூல் சாதனைப் படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் இப்படம் செய்த வசூல் என்று கணக்கிட்டால் 391 மில்லியன் டாலர் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, தமிழக திரையரங்கிலும் தமிழ் படங்களுக்கு இணையான வசூல் சாதனையைப் படைத்ததாகக் கூறுகிறார்கள். கொரோனாவுக்குப் பிறகு தமிழில் மாஸ்டர் எப்படி திரையரங்கில் ஹிட்டோ, அதுமாதிரி ஹாலிவுட்டில் நீண்ட நாளுக்குப் பிறகு பெரிய ஹிட்டாக காட்ஸில்லா படம் தான் அமைந்திருக்கிறதாம்.
இந்த மாதிரியான மான்ஸ்டர் வெர்ஸ் சீரிஸ்ஸில் இது வரைக்கும் ‘காட்ஸில்லா’, ‘காங் ஸ்கல் ஐலேண்ட்’, ‘காட்ஸில்லா கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ்’ ஆகிய படங்களின் வரிசையில் வெளியான நான்காவது படம் இது. இப்படம், முந்தைய பாகங்களை விட பெரியளவில் வெற்றியைப் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். உலகமே அச்சத்திலும் மன அழுத்தத்திலும் இருந்துவரும் நிலையில் மிகப்பெரிய எண்டர்டெயின்மெண்டாக இது அமைந்ததாக அமெரிக்க டிரேடிங் வட்டாரத்தினர் கூறுகின்றனர். விரைவிலேயே 400 மில்லியன் எனும் இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**- ஆதினி**
�,