கபாலி படத்திலிருந்து பட தேர்வுகளில் வித்தியாசம் காட்டிவருகிறார் ரஜினி. பொதுவாக, சீனியர் இயக்குநர்களுக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுத்துவந்தவர், இப்போது இளம் இயக்குநர்களைத் தேடி வரத் தொடங்கியிருக்கிறார். அப்படி, கபாலி, காலா, பேட்ட என ஒவ்வொரு படமுமே ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது.
அடுத்ததாக, ரஜினி நடித்துவரும் ‘அண்ணாத்த’ படத்தை இளம் இயக்குநரான சிவா இயக்கிவருகிறார். இது, ரஜினிக்கு 168-வது படம். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் டி.இமான் இசையில் இந்தப் படம் உருவாகிவருகிறது. ரஜினியுடன் நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பில் மிகப்பெரிய இடைவெளி விழுந்தது. தற்பொழுது, மின்னல் வேகத்தில் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் படத்துக்கானப் படப்பிடிப்புக்கு நயன்தாரா தனி விமானத்தில் சென்றதெல்லாம் இணையத்தில் வைரலானது. இறுதிக்கட்ட ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடித்திருக்கிறது.
தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது நல்ல அபிப்ராயம் கொண்டிருக்காராம் ரஜினி. ஏனெனில், ரஜினியின் விருப்பப்படியே படப்பிடிப்பை ஏற்பாடு செய்வது, மிகுந்த அக்கறையுடன் பட தயாரிப்பை அணுகுவதால் மீண்டும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு படம் பண்ணவும் தயாராக இருக்கிறாராம். அப்படிப் பார்த்தால், எந்திரன், பேட்ட, அண்ணாத்த தொடர்ந்து நான்காவது முறையாக சன் பிக்சர்ஸூக்கு படம் நடிப்பார் ரஜினி.
இரண்டு இயக்குநர்களிடம் கதை கேட்டு வைத்திருக்கிறாராம் ரஜினி. ஒருவர், ரஜினி நடிக்க பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ். மற்றொருவர் தேசிங்கு பெரியசாமி. துல்கர் சல்மான் நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நேரில் அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்நிலையில், இரண்டு இளம் இயக்குநர்களிடமும் கதை கேட்டிருக்கிறாராம் ரஜினி.
ரஜினியின் அடுத்தப் பட இயக்குநர் யாரென்பது விரைவிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
**- தீரன் **
.�,