தனிப்பட்ட உரிமைகள்: ஷில்பா ஷெட்டி உருக்கம்!

entertainment

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தன் பெயரைக் கெடுக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டதாகச் சொல்லி 29 மீடியா நிறுவனங்கள் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கினை தொடர்ந்துள்ளார்.

ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களைத் தயாரித்து, அதனைத் தனது மொபைல் அப்ளிகேஷனில் வெளியிட்டதாகக் கூறி மும்பை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த ஆபாசப் பட தயாரிப்பில் ஷில்பாவுக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இதனை பல்வேறு மீடியாக்களும் எழுதியிருந்தன. இந்நிலையில் அந்த ஊடகங்கள் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி.

அவர் தன் மனுவில், சமீப நாட்களில் என் பெயரைக் கெடுக்கும் வகையில் பொய்யான பல செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஆபாசப் படங்களை தயாரித்த புகார் மற்றும் அது தொடர்பான விசாரணையில் எனக்குத் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளால் என் பெயர், கேரக்டர் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னை ஒரு கிரிமினல் போன்று சித்தரித்துள்ளனர். இந்தக் கிரிமினல் விசாரணையால் தன் கணவரை ஒதுக்கிவிட்ட பெண்ணாக என்னைக் காட்டியிருக்கிறார்கள்.

என்னைப் பற்றிய அவதூறு செய்திகள், வீடியோக்களால் பொது மக்கள், ரசிகர்கள், விளம்பர நிறுவனங்கள், சக கலைஞர்கள் மத்தியில் என் பெயர் கெட்டுவிட்டது. இந்த அவதூறு செய்திகளால் என் குழந்தைகள், வயதான பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாரின் பெயரும் கெட்டுவிட்டது. என்னை பற்றிய அவதூறு செய்திகளால் ஏற்பட்ட இழப்பைப் பணத்தால் சரி செய்ய முடியாது.

என்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட அந்த சில ஊடகங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் என்னைப் பற்றிய தவறான செய்திகளை அகற்றுவதுடன் 25 கோடி ரூபாய் நஷ்டஈட்டையும் அவர்கள் எனக்கு அளிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், “இந்த ஆபாச பட தயாரிப்பு வழக்கில் ஷில்பா செட்டிக்குத் தொடர்பில்லை என்றோ அவர் குற்றமற்றவர் என்றோ இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. அவரும் இதில் ஒருவராகச் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆபாச படத் தயாரிப்பில் பெறப்பட்ட பணத்திற்கான கணக்கு, வழக்குகளை ஆடிட் செய்ய வெளிநாட்டு ஆடிட்டர்களை நியமித்துள்ளோம். அதன் முடிவு வருவதற்கு நீண்ட காலமாகலாம். அந்த அறிக்கை வரும் வரையிலும் யாருக்கும் நாங்கள் ‘குற்றமற்றவர்’ என்ற சான்றிதழைத் தர முடியாது” என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விவகாரம் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி இதுவரையிலும் கருத்து எதுவும் தெரிவிக்காமலிருந்தவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

ஆம் கடந்த சில நாட்கள் நாங்கள் பார்த்த அனைத்து திசைகளும் சவால் மிகுந்ததாக இருந்தது ஏராளமான வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் வலம் வந்தன. ஊடகங்களாலும், நலம் விரும்பிகளாலும் ஆதாரமற்ற தாக்குதல்கள் என் மீது தொடுக்கப்பட்டன ஏராளமான கேலிகளும், கேள்விகளும் பதிவிடப்பட்டன. என் மீது மட்டுமின்றி, என் குடும்பத்தினர் மீதும்.

ஆனால் அவை எது குறித்தும் இன்னும் நான் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தொடர்ந்து இதுகுறித்து எதுவும் நான் கூறப்போவதில்லை எனவே என் மீது தவறாகப் பழி சுமத்துவதை நிறுத்துங்கள். மீண்டும் சொல்கிறேன் ஒரு நடிகையாக என்னுடைய பதில், இதற்குப் புகார் சொல்லக்கூடாது. விளக்கம் சொல்லக்கூடாது என்பதுதான்

நான் சொல்வதெல்லாம் ஒன்று தான் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித் துறையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு குடும்பமாக எங்களால் இயன்ற அனைத்து சட்டப்பூர்வமான வழிகளையும் நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம் .

ஆனால் ஒரு தாயாக நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது ஒன்றுதான் எங்களுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக்கொடுங்கள் ஒரு விஷயத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அதுகுறித்து கருத்து கூறாதீர்கள்.

நான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகள். கடந்த 29 ஆண்டுகளாகக் கடினமாக உழைக்கும் ஒரு பெண். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் அவர்களுடைய நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன். மிக முக்கியமாக இந்தத் தருணத்தில் என்னுடைய மற்றும் என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்குமாறு பணிவுடன் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை. சட்டம் அதன் கடமையைச் செய்ய விடுங்கள். இவ்வாறு அந்த பதிவில் ஷில்பா ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *