2ஆவது டெஸ்ட் – 2ஆவது இன்னிங்ஸ்: இந்திய அணி 181/6

entertainment

இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 82 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கே.எல்.ராகுலும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்ஸைத் தொடங்கினர்.

வலுவான தொடக்கம் கொடுத்த ரோகித்-ராகுல் கூட்டணி 126 ரன்களை (43.4 ஓவர்) எட்டியபோது உடைந்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் (145 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா (9 ரன், 23 பந்து) ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பேர்ஸ்டோவிடம் சிக்கினார்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி தனது ஆறாவது சதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் குவித்திருந்தது. 127 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ராபின்சன் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்து பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 40 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியின் ராபின்சன், மார்க் வுட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மொயீன் அலி ஒரு விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் (49), சிப்லி (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹமீது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

இதன்பின் விளையாடிய ரூட் (48) மற்றும் பேர்ஸ்டோ (6) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 45 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், பேர்ஸ்டோ அரை சதம் கடந்து (57) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பட்லர் (23), மொயீன் அலி (27) ரன்களில் வெளியேறினர். கர்ரன் (0), ராபின்சன் (6), வுட் (5), ஆண்டர்சன் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மூன்றாவது நாளில் 128 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் முடிவில், 27 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 15) நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இதில், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் (5), ரோகித் (21) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து விளையாடிய புஜாரா (45), கோலி (20) ரன்கள் எடுத்து வெளியேறினர். எனினும், ரஹானே அரை சதம் (61) விளாசினார். இதில், 5 பவுண்டரிகளும் அடங்கும். அவர் ஆட்டமிழந்த பின்னர், ரிஷாப் பண்ட் 14 மற்றும் இஷாந்த் சர்மா 4 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். ஜடேஜா 3 ரன்களில் போல்டு ஆனார்.

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 82 ஓவர்களுக்கு, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 154 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இன்று கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா விக்கெட் இழக்காமல் நிலைத்து நின்று ஆடினால் டிராவில் முடியும். விக்கெட்டுகளை இழந்தால், இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *