தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் கிட்டத்தட்ட 75 சதவிகித பாதிப்பு தலைநகர் சென்னையில்தான் பதிவாகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களைப் போலவே இன்றும் (ஜூன் 2) தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 40 பேர் மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்தவர்கள். ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஆண்கள் 15,394, பெண்கள் 9,179, திருநங்கைகள் 13 பேர். 10,680 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 806பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர செங்கல்பட்டில் 82 பேருக்கும், திருவள்ளூரில் 43 பேருக்கும், தூத்துக்குடியில் 31 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 73 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுவதாகவும், இன்று மட்டும் 11,904 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 5, 14,433 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அதேபோல இன்று மட்டும் 536 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 13,706 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 7,176 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
**எழில்**�,