பிரியாணி என்றால் மட்டன், கிச்சன், மீன், இறாலில் செய்யப்படும் அசைவ பிரியாணி வகைகளே அனைவர் மனத்திலும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. ஆனால், காளான், சோயா, காலிஃப்ளவர் போன்றவற்றையும் வைத்து அட்டகாசமான சைவ பிரியாணிகளை செய்து அசத்தலாம். அதற்கு உதாரணமே இந்த காய்கறி பிரியாணி.
**என்ன தேவை?**
காய்கறி (கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர் சேர்த்து) – அரை கிலோ
சீரகச் சம்பா அரிசி – அரை கிலோ
வெங்காயம் – ஒன்று
புதினா – கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு
மிளகு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 2 சிறிய துண்டு (தோல் சீவவும்)
பூண்டு – 8 பல்
தயிர் – அரை கப்
துருவிய தேங்காய் – கால் கப்
பெருஞ்சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 4
பிரியாணி இலை – 4
முந்திரி – 10
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 2 டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். காய்கறி மற்றும் அரிசியை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ளவும். கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை ஒன்றாகச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்..
துருவிய தேங்காய், மிளகு, பெருஞ்சீரகம், கசகசா, முந்திரியை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு குக்கரில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக்கொள்ளவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்த்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதக்கவும். அரைத்துவைத்துள்ள பச்சை விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சுத்தம் செய்த காய்கறி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தயிர் ஊற்றிக் கலந்து, நெய் மிதக்கும் வரை வதக்கவும். சுத்தம் செய்த அரிசி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதித்தபின் குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெள்ளை காய்கறி பிரியாணி ரெடி.�,