தெலுங்குத் திரையுலகில் பரவலாக கவனம் பெற்ற லாவண்யா திரிபாதி அங்கு இந்த ஆண்டு மட்டும் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரம்மன் திரைப்படம் மூலம் அறிமுகமான அவர் தற்போது சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக மாயவன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
சி.வி.குமார் இயக்கும் கிரைம் திரில்லர் வகையைச் சேர்ந்த மாயவன் திரைப்படம் குறித்த தனது அனுபவங்களை டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் லாவண்யா பகிர்ந்துகொண்டுள்ளார். “மனநல மருத்துவராக நடிக்கிறேன். எனது உடல்மொழி டிரெண்டியாக இருக்கும். மனநல மருத்துவர்கள் எவ்வாறு ஆலோசனை வழங்குவார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து நடித்துள்ளேன். நுட்பம் மற்றும் யதார்த்தமான கதாபாத்திரமாக உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சந்தீப் கிஷன் குறித்து கூறிய அவர், “சந்தீப்பை எனக்கு நீண்ட நாள்களாக தெரியும். நன்கு பரிச்சயமான நபரோடு இணைந்து நடிப்பது அருமையான அனுபவம்” என்று கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 100% காதல் படத்தில் ஒப்பந்தமாகியிருந்த லாவண்யா பின் தெலுங்கு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் படத்திலிருந்து விலகுவதாக கூறினார். தற்போது அந்த படத்தில் ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்.