வருங்கால கணவர்: மனம் திறந்த கங்கனா


நான் யாரையாவது காதலித்தால்கூட, பிறகு அவருக்கு நாட்டுப்பற்று இல்லை என்று தெரியவந்தால் உடனடியாக காதலை முறித்துக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத்
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் கங்கனா ரனாவத். இவர் தற்போது ‘மணிகார்னிகா’ என்ற இந்திப் படத்தில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்காக ’வாள் சண்டை’, ‘குதிரையேற்றம்’ போன்ற சாகச பயிற்சிகளையும் பெற்றுள்ளார். இந்தப் படத்துக்காக பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய இவர் மணாலியில் உள்ள தன் பங்களாவில், 31 மரக்கன்றுகளை நட்டார். இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த கங்கனா ரனாவத், "ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிறந்தநாள் வரும்போது ஏதேனும் ஒரு சபதம் எடுத்துக்கொள்வார்கள். எனது பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடத் திட்டமிட்டேன். ஆண்டுக்கு ஒரு மரக்கன்று என்ற வகையில் 31 மரக்கன்றுகளை நட்டேன். அது மகிழ்ச்சியாக இருந்தது. மரக்கன்றுகள் நடுவதன் மூலம் மனஅழுத்தங்களைக் குறைக்க முடியும்" என்று கூறியுள்ளார்.