ஏப்ரல் 2இல் மருந்துக் கடைகள் அடைப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஏப்ரல் 2ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மருந்துக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கே.கே.செல்வன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என்று முதலமைச்சரும் அமைச்சர்களும் நம்பிக்கைத் தெரிவித்துவந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எவ்வித அறிவிப்பையோ அல்லது பணிகளையோ மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததைக் கண்டித்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மருந்துக் கடைகளை மூட தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.