ஆப்பிள் நிர்வாகி பலி: காவலர் கைது!


உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆப்பிள் நிறுவன நிர்வாகி பலியான விவகாரத்தில், அவரது குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது அம்மாநில அரசு.
கடந்த 28ஆம் தேதியன்று இரவு, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஆப்பிள் நிறுவன நிர்வாகியான விவேக் திவாரி தனது தோழியுடன் காரில் சென்றார். வழியில், அவரது காரை நிறுத்தும்படி காவல் துறையினர் கூறியுள்ளனர். இதனை ஏற்காமல், அவர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி விவேக் திவாரி உயிரிழந்தார்.
காவல் துறையினர் கழுத்தில் சுட்டதால் விவேக் திவாரி பலியானதாகத் தெரிவித்தார், அவருடன் காரில் பயணித்த தோழி சனா. ஆனால், காவலர் ஒருவர் மீது காரை ஏற்ற முயற்சி செய்ததால், அவர் மீது தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உ.பி. காவல் துறை விளக்கமளித்தது. இந்த விவகாரத்தில் உ.பி. முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று போராட்டம் நடத்தினார் விவேக்கின் மனைவி கல்பனா.
இதன் தொடர்ச்சியாக, உ.பி. அரசின் சார்பில் விவேக்கின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படுமென்றும் அறிவித்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவைப்பட்டால், அதற்கு உத்தரவிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், இது என்கவுன்டர் அல்ல என்றும் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பிரசாந்த் சவுத்ரி என்ற காவலர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, தனது போராட்டத்தைக் கைவிட்டார் கல்பனா. விவேக் திவாரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. விவேக் கொல்லப்பட்ட இடத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நேற்று (செப்டம்பர் 30) ஆய்வு நடத்தினர்.