மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவார்களா?

சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று மாறன் சகோதரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்காக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஏழு பேரை இன்று (ஜனவரி 30) நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது,
இந்த நிலையில் தயாநிதி மாறன், காலநிதி மாறன் உள்ளிட்டோர், சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (ஜனவரி 29) மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் ஏற்கெனவே போதிய முகாந்திரம் உள்ளதென உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், மனுதாரர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை சிபிஐ நீதிமன்றத்தில்தான் எடுத்து வைக்க வேண்டுமே தவிர, அதை எதிர்த்து முறையீடு செய்வது தேவையற்றது எனவும் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுப் பதிவுக்கு நேரில் ஆஜராகுமாறு தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தார்.