பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதியளித்த கல்லூரிக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 20ஆம் தேதி சென்னை தாம்பரத்திலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய், பேனர் விவகாரத்தில் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். “சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்தவர்களையும், லாரி டிரைவரையும் கைது செய்திருக்கிறார்கள். யார் யாரை எங்கு வைக்கவேண்டுமோ, அங்கு வைத்தால் இதுபோன்ற பிரச்சினை வராது” என்று அவர் பேசியதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
விஜய்யை அதிமுகவினர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். விஜய்யின் படங்கள் வெளியாக அதிமுக பல உதவிகளை செய்துள்ளதாக குறிப்பிட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிமுக இல்லையென்றால் மெர்சல் திரைப்படமே வெளிவந்திருக்காது” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு இன்று (செப்டம்பர் 24) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது? அரசியல் தொடர்பான பேச்சுக்கள் அடங்கிய விழாவை நடத்த கல்வி நிறுவனத்தில் இடம் உண்டா என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தமிழகம் வந்த அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஆனால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் ராகுல் காந்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு கல்லூரி அனுமதியளித்தது என்பது குறித்து விசாரிக்க கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குனர் சாருமதி நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
�,