தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றி மாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா இயக்கும் புதிய படம் குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு குறும்படங்களைக் கொண்ட தொகுப்புகள் அடங்கிய ஜானரே ஒரு ஆந்தாலஜி திரைப்படம் எனக் கூறப்படுகிறது. பெரும்பாலும் இவை ஒரே கருப்பொருள், களம் அல்லது ஒரு திருப்புமுனை ஆகியவற்றால் பிணைக்கப்படும் தன்மையுடையது.
ஒரே மையக்கருவை எடுத்துக் கொண்டு நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட குறும்படங்களை ஒன்றினைத்து வெளியாகும் ஆந்தாலஜி திரைப்படங்கள் இந்தி, மலையாள சினிமாக்களில் அடிக்கடி நிகழ்வதுண்டு. நாலு பெண்ணுகள், 5 சுந்தரிகள், கேரளா கஃபே போன்றவை மலையாளத்தில் குறிப்பிடும்படியான ஆந்தாலஜி திரைப்படங்களாகும். இந்தியில் ஐ ஏம், பாம்பே டாக்கிஸ், எக்ஸ்: பாஸ்ட் இஸ் பிரசண்ட், சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகியவை இந்தியில் குறிப்பிடும்படியான படங்களாகும்.
தமிழிலும் இதே போன்ற ஆந்தாலஜி திரைப்படங்கள் ஆரம்பகாலகட்டங்களில் இருந்தே நடைபெற்று வருகின்றது. 1939ஆம் ஆண்டு வெளியான அடங்காபிடாரி, புலிவேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன் ஆகிய தனித்தனி நகைச்சுவை கதைகளின் தொகுப்பாக தயாரிக்கப்பட்ட ‘சிரிக்காதே’ தமிழில் இவ்வகைக்கு ஓர் முன்னோடி எனலாம். சில ஆண்டுகளுக்கு முன் அவியல், 6 அத்தியாயங்கள் போன்ற படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ஒரு இடைவெளிக்குப் பின் ஆந்தாலஜி திரைப்படம் தமிழில் உருவாகவிருக்கிறது. இம்முறை முன்னணி இயக்குநர்களான வெற்றி மாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா ஆகியோர் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இவர்கள் இயக்கும் நான்கு குறும்படங்கள் ஒரே படமாக உருவாகவுள்ளது. இந்த நான்கு படங்களுக்குமான மையக்கரு, கவுரவக் கொலையாகும்.
சமீபத்தில் வெளியான வெற்றி மாறனின் அசுரன் திரைப்படம் சாதி ரீதியான அடக்குமுறைக்கு எதிரான படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், தனது அடுத்த படத்தையும் அதே போன்ற கனமான கதைக்களத்தோடு வெற்றி மாறன் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சுதா கொங்காரா தற்போது சூர்யா நடிப்பில் உருவாகிவரும் சூரரைப் போற்று படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார். விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் இணைவதற்காக அப்படத்தின் திரைக்கதை பணிகளை முடித்துள்ளார். கெளதம் மேனன், எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் நவம்பர் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
நால்வரில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்திற்கான படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி, பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் ஆகியோர் நடிக்கின்றனர். மற்ற மூன்று இயக்குநர்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது.�,