தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
சில்லுனு ஒரு காதல் திரைப்படத்துக்குப் பிறகு சூர்யா-ஜோதிகா ஜோடி கணவன், மனைவியாக மக்களுக்கு அறிமுகமானார்கள். பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் கார்த்தி நடிகராக அறிமுகமானார். ஆனால், அதேசமயம் ஒரு தயாரிப்பாளராக மக்களுக்கு அறிமுகமானவர் தான் ஞானவேல் ராஜா.
அப்படி, 2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் மூன்று திரைப்படங்களைத் தயாரித்து, அதன்மூலம் கிடைத்த வருவாய்க்கு உரிய வரி செலுத்தவில்லை என வருவாய் துறையினர் ஞானவேல் ராஜா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கினார்கள். ‘என் மீது விழுந்த கரையை நான் அகற்றுவேன்’ என்று பேசிவிட்டு நீதிமன்றத்துக்குச் சென்று தனது தரப்பு வாதத்தை, இவ்வழக்கின் தொடக்க காலத்தில் பதிவு செய்தார். ஆனால், வழக்கின் அடுத்தடுத்த கட்டங்களில் வருவாய் துறையினர் முன்வைத்த வாதத்துக்கு ஞானவேல் ராஜா பதில் சொல்லவில்லை.
எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பலமுறை சம்மன் அனுப்பியும் ஞானவேல் ராஜா வரவில்லை என நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தை விசாரிக்க, ஞானவேல் ராஜாவின் வக்கீலை அழைத்தபோது அவரும் வரவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என வருவாய் துறையினர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனவே, இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, இந்த வழக்கினை நவம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
�,”