பாஜக எம்.பி.க்கள் பலர் தினசரி முறையாக நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை என்று பிரதமர் மோடி அதிருப்தியடைந்திருக்கிறார். இன்று (டிசம்பர் 3) நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், “நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்தும் கணிசமான எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்ட அமர்வுகளில் கலந்துகொள்வதில்லை என்று பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
உள்துறைஅமைச்சர் அமித் ஷா விரைவில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் தொடர்பான மசோதாவை அவையில் தாக்கல் செய்ய இருக்கிறார். இது காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு நீக்கம் போலவே மிக முக்கியமானது. எனவே அன்று பாஜக எம்.பி.க்கள் அத்தனை பேரும் அவையில் இருக்க வேண்டும். அன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் பாஜக எம்.பி.க்கள் கணிசமான அளவில் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும். அவையில் கலந்துகொள்ளாததற்கான நியாயமான காரணங்கள் இருப்பின் அனுமதிக்கலாம். ஆனால் எந்தக் காரணமும் இன்றி அவைக்கு வராமல் இருப்பதை அனுமதிக்க முடியாது. பிரதமர் ஒவ்வொரு எம்.பி.யையும் கவனித்துகொண்டுதான் இருக்கிறார். அதிலும் பாஜக எம்பி.க்களை இன்னும் உற்று கவனிக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார் ராஜ் நாத் சிங்.
�,