ஹைதராபாத் என்கவுன்ட்டருக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 9) ஒப்புதல் அளித்துள்ளது.
ஹைதராபாத் பெண் மருத்துவர் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆரிஃப், நவீன், சிவா, சென்னகேசவலு ஆகிய 4 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதற்கு வரவேற்பு கிடைத்த அதே வேளையில் எதிர்ப்பும் கிளம்பியது.
தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் தனிக் குழுவை தெலங்கானாவுக்கு அனுப்பியது. அக்குழு, 4 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் விசாரணை நடத்தியது. சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது.
இந்நிலையில் இன்று, என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. தெலங்கானா தலைமைச் செயலாளர் ஜோஷி பிறப்பித்த உத்தரவில், டிஜிபி பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது மற்றும் போலீசாரின் என்கவுன்ட்டர் குறித்து விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் எம் பாகவத் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு, விசாரணையைத் தொடங்கவுள்ளது.
இதற்கிடையே என்கவுன்ட்டருக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. என்கவுன்ட்டர் குறித்து சிபிஐ-சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். போலீசார் ஆதாரங்களை அழிக்கக் கூடும் என்பதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இதனை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்ததுடன், நாளை மறுநாள் முதல் விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே 4 பேரின் உடல்களைப் பாதுகாத்து வைக்கக் கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இன்று இரவு 8 மணி வரை உடல்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
�,