தமிழக அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடு, ஊழல் நடப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில் தற்போது குரூப்-1 தேர்விலும் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடந்த குரூப்- 1 முதன்மை தேர்வுக்கான முடிவு நேற்று வெளியிடப்பட்டது. துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பெண்களை, பேனாவால் எழுதக்கூடாது, பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த 21 ஆம் நூற்றாண்டில், கணினிகளின் காலத்தில், வெளிப்படையாக ஒரு மோசடி நடைபெற இருக்கின்றது. அதையும், தமிழக அரசே நடத்தப் போகிறது என்பது மிகவும் வேதனைக்கு உரியது. கிராமப்புற, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற இந்த கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மதிப்பெண்களைத் திருத்தி, தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. பென்சிலால் அல்லாமல் மதிப்பெண்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அனைத்து நேர்காணல்களையும், காணொலிப் பதிவு செய்ய வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.�,”