உள்ளாட்சித் தேர்தல் காரணமாக குரூப்-1 நேர்காணல் மற்றும் துறைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு டிஎன்பிஎஸ்சி இன்று விளக்கமளித்தது.
தமிழகத்தில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை குரூப் -1 எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக இது ஒத்திவைக்கப்படுவதாக நேற்று தகவல் வெளியானது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று விளக்கமளித்துள்ளது. அதில்,
குரூப்-1ல் அடங்கிய பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு திட்டமிட்டபடி 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்ட அலுவலர் / உளவியலாளர் மற்றும் சிறை அலுவலர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகளும் திட்டமிட்டபடி 21.12.2019 மற்றும் 22.12.2019 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு 22.12.2019 முதல் 30.12.2019 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு 05.01.2020 முதல் 12.01.2020 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைத் தேர்வுகள் என்பது ஏற்கனவே அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்த பதவி உயர்வுக்காக நடத்தப்படும் துறை சார்ந்த தேர்வாகும்.
முன்னதாக குரூப் 1 தேர்வில், நேர்காணலின் போது பென்சிலால் மதிப்பெண்கள் குறிக்கப்பட்டு முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியானது. இதற்கு விளக்கமளித்துள்ள டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பாக தேர்வர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தேர்வர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறியீட்டுத் தாள்களில் பேனா மையினால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,