திமுக – காங். கூட்டணி: அழகிரியிடம் சிதம்பரம் சொன்னது என்ன?

politics

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டதாகவும், ஒப்புக்கொண்ட இடங்களில்கூட காங்கிரஸ் கட்சிக்குரிய வாய்ப்புகளை அளிக்கவில்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியும் தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமியும் இணைந்து பிப்ரவரி 10ஆம் தேதி கூட்டறிக்கை வெளியிட்டனர். இது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது.

உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் தொடங்கியதிலிருந்து திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான இந்த இடைவெளியை ஊடகங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிய போதும் அமைதியாக இருந்த காங்கிரஸ் தலைவர் அழகிரி, மறைமுகத் தேர்தலுக்கு முதல் நாளன்று இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அவர் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களில் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், “இது காங்கிரஸ் கட்சியின் ஆதங்கம் தானே தவிர, திமுக மீதான கோபம் அல்ல” என்று விளக்கம் அளித்தார். மேலும் அழகிரியைத் தொடர்புகொண்ட சிதம்பரம் இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி கடிந்து கொண்டிருக்கிறார். அதோடு சில விஷயங்களையும் அழகிரியிடம் சிதம்பரம் கூறியிருக்கிறார்.

“தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக அண்மையில் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் பிரதமர் மோடியிடம் வழங்கினார்கள். அப்போது பிரதமர் மோடி பாலுவிடம், ‘இன்னும் ஏன் காங்கிரஸைத் தூக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கைவிட்டுவிட்டால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இருக்காது. இந்தியாவிலேயே அங்குதான் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் இருக்கிறது. எனவே காங்கிரஸ் கூட்டணியை மறுபரிசீலனை செய்யுமாறு உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இதேபோல பாஜக தலைவர் அமித் ஷாவும், ‘நீங்க பாஜகவை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பது உங்களுக்கு நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல’ என்று தன்னைச் சந்திக்கும் திமுகவினரிடம் கூறியிருக்கிறார்.

இப்படி காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் இருந்து நீக்குமாறு பிரதமரும் அமித் ஷாவுமே அழுத்தம் கொடுத்தும் திமுக அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சியோடு தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சினையை மையமாக வைத்து இப்படி அறிக்கைவிட்டால் அது தேசிய அளவில் காங்கிரஸுக்குதான் பாதகமாகும். எனவே அறிக்கை விட்டது தவறு” என்று அழகிரியிடம் சிதம்பரம் எடுத்துக் கூறியுள்ளார்.

இதையடுத்தே, “கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. மனத்தில் தோன்றியதை சொன்னேன். அது நேற்றோடு முடிந்துவிட்டது” என்று அழகிரி விளக்கம் கொடுத்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *