�
இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டப்படும் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
அயோத்தி தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கு சொந்தமானது எனவும், அதில் ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ராமர் கோயில் கட்டுவதற்கான முன்னெடுப்புகளை மத்திய பாஜக அரசும், உத்தர பிரதேச அரசும் மேற்கொண்டு வருகின்றன. விரைவில் கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோயில் கட்டப்படும் என காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலம் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தை மகாபோதி சமூகத்தினர் நேற்று (ஜனவரி 27) சந்தித்துப் பேசினர். இதன்பின்னர், கமல்நாத் வெளியிட்ட அறிவிப்பில், “இலங்கையில் சீதைக்கு பிரமாண்டக் கோயில் கட்டப்படும். இதற்கான வரைபடத்தை இறுதி செய்து இந்த நிதியாண்டுக்குள்ளேயே நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட மத்திய பிரதேசம், இலங்கை அரசு அதிகாரிகள், மகாபோதி சமுதாய உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கை சென்ற மத்திய பிரதேச அமைச்சர் பி.சி.சர்மா தலைமையிலான குழுவினர், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவை சந்தித்து சீதைக்குக் கோயில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதன் பின்னரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கமல்நாத்.�,