தமிழகம் முழுவதும் பால் விநியோக நேரத்தைக் குறைத்து பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நேற்று முதல் அமலில் இருந்து வருகிறது. எனினும் மளிகை பொருட்கள், உணவு, காய்கறிகள், இறைச்சி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் துறையின் நடவடிக்கைகள் காரணமாக தங்களது பால் விநியோக நேரத்தை குறைத்து பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.அ.பொன்னுசாமி இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனா குறித்த மத்திய, மாநில அரசுகளின் எச்சரிக்கையையோ, அது குறித்த அறிவிப்புகளையோ சற்றும் கவனத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் பொதுவெளிகளில் கூட்டம், கூட்டமாக கடைகளுக்கு செல்வது, சாலைகளில் பயணிப்பது என கொரானா வைரஸ் தொற்றை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல் செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் அஜாக்கிரதையாலும், மெத்தனத்தாலும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களும் மற்றும் வணிகப் பெருமக்களும் காவல்துறையின் நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறியுள்ள பொன்னுசாமி, “காவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள், அடக்குமுறை அராஜகங்களால் பால் முகவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால் பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்ற பாலினை சில்லறை வணிகர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
ஆகவே தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்கள் அனைவரும் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்றும், பால் முகவர்களின் கடைகளில் அதிகாலை 3.30மணி முதல் காலை 9.00மணி வரை மட்டும் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்வது என முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் பொன்னுசாமி.
மேலும், பால் தட்டுப்பாடு என கூறி 1லிட்டர் பாலினை 100.00ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாக தகவல்கள் வருகின்றன. அவ்வாறு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் குறித்த தகவலை அளித்தால், அந்த நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
**எழில்**
�,