ஆர்.எஸ்.பாரதி கைதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்தை கடந்த மே 13ஆம் தேதி ஒருங்கிணைவோம் வா திட்ட மனுக்கள் கொடுப்பது தொடர்பாக டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி தயாநிதிமாறன், தங்களை தலைமைச் செயலாளர் அவமானப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?” என்று அவர் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பட்டியலின மக்களை இழிவுபடுத்தியதாகக் கூறி கோவையைச் சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பட்டியலினத்தோர் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 2 மாதங்களுக்குப் பிறகு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அடுத்த சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், “எவரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை தாங்கள் தெரிவிக்கவில்லை. எனவே வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் அமர்வில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
**எழில்**�,