குரு மகன், மருமகன் மீது தாக்குதல்: காடுவெட்டியில் நடந்தது என்ன?

politics

மறைந்த வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், சகோதரி மகன் மதன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு கொடூரமாகத் தாக்கப்பட்டு, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னணியில் இருப்பது பாமகதான் என குருவின் சகோதரி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் காடுவெட்டி கிராமத்தில் நடந்தது என்ன என்று விசாரித்தோம்….

பாமக நிறுவனர் ராமதாஸும், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவும் நகமும் சதையுமாக இருந்தார்கள். தான் பெற்றெடுக்காத மூத்த மகன் குரு என்று ராமதாஸ் அவர் மீது அன்பைப் பொழிந்தார். நுரையீரல் திசுப்பை நோயால் அவதிப்பட்டு வந்த குரு, அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2018 மே 25ஆம் தேதி உயிரிழந்தார்.

அது முதற்கொண்டு பாமக தலைமைக்கும் குரு குடும்பத்தினருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் வெளிப்பட்டு வந்தன. ஊரடங்கு அமலில் இருப்பதால் குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை பெரிய அளவில் அனுசரிக்க வேண்டாம் என பாமக நிர்வாகிகளுக்கு தைலாபுரம் தோட்டத்திலிருந்து உத்தரவு சென்றுள்ளது. இதனால், கடந்த 25ஆம் தேதி குரு நினைவு நாள் பெரிய அளவில் அனுசரிக்கப்படவில்லை என்கிறார்கள் பாமக வட்டாரங்களில். அன்றைய தினம் குரு உறவினர்களுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கு மறுநாள் 26ஆம் தேதி கடலூர் மாவட்டம் குருங்குடியிலிருந்து அருண்குமார் (வயது 23) என்பவர், கனலரசனை பார்க்கக் காடுவெட்டிக்கு வந்தார். இரு சக்கர வாகனத்தில் ஊரின் குறுக்கே, நெடுக்கே வேகமாக அவர் வண்டியை ஓட்டியதால், காமராஜ் என்பவர் அதனை தட்டிக்கேட்டார். இதனைப் பார்த்த குருவின் மருமகனின் அண்ணன் மதன்குமார் அதுபற்றி விசாரித்தார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகி ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் மதன்குமாருக்குத் தலையில் அரிவாள் வெட்டு விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. மதன்குமாரை காப்பாற்றச் சென்ற கனலரசனுக்கும் கையில் லேசான காயம் ஏற்பட்டது. தற்போது மதன்குமார் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மதன்குமாரின் தம்பி மனோஜ் குமார்தான் குரு மகள் விருதாம்பிகையை திருமணம் செய்துகொண்டவர்.

மனோஜ் மற்றும் மதன் கடலூர் மாவட்டம் பழஞ்சநல்லூர் சேர்ந்தவர்கள். இருவரும் அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் இருந்து அரசியல் செய்ய முயற்சிப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் கூட இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம்” என்கிறார்கள் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியே மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

**வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *