கொரோனா வைரஸ் தமிழக அரசின் அதிகார பீடத்தில் இருக்கும் பலர் மத்தியில் வேகமாக பரவி வருவதால் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மிகவும் எச்சரிக்கையோடே தங்கள் நிகழ்ச்சி நிரல்களை அமைத்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர்களும், ஐ.ஏ.,எஸ், அதிகாரிகளும் பார்வையாளர்கள் சந்திப்பை பெருமளவு குறைத்துவிட்டார்கள்.
தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல அலுவலகங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் முதல்வர் இதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டுமென்று கருதுகிறார். சென்னையில் கொரோனா தடுப்புப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்ததுமே அவரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் முதல்வர். இதுபற்றி இன்று செய்தியாளர்கள் கேட்டபோது கூட, ‘தனக்குப் பாதிப்பு இல்லை என்று அவரே சொல்லிவிட்டார் என்று விளக்கம் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனபோதும் சென்னை மண்டல பொறுப்பாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் உட்பட அனைத்து அமைச்சர்களிடமும் தான் பேச வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், ‘கொரோனா டெஸ்ட் எடுத்தீங்களா? கவனமா இருங்க’ என்று அக்கறையுடன் விசாரித்து வருகிறார்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஜூன் 20) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ”அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர், ‘நீங்க கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டீர்களா தம்பி?’ என்று என்னை முதலில் கேட்டார். ‘எடுக்கவில்லை என்றால் உடனடியாக எடுங்கள்’ என்றும் கூறினார். சக அமைச்சர்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் மீது அன்பாக உள்ள முதல்வரையும் துணை முதல்வரையும் நாம் பெற்றிருக்கிறோம். உங்கள் எல்லோரின் நல்லாசியால் அவருக்குக் கொரோனா வராது. வந்தாலும் உடனடியாகக் காலியாகி விடும்” என்று கூறினார்.
“அறிகுறி இருந்தாலும் இல்லையென்றாலும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வாரா வாரம் டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது தடுப்பு நடவடிக்கைகளோடு செயல்பட வேண்டும். குறிப்பாக சென்னையில் களப் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர்கள் இதை கண்டிப்பாக கவனமுடன் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறிவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி… தனக்கும் வாராவாரம் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்கிறார். குறிப்பாக அறுபது வயதுக்கும் மேற்பட்ட அமைச்சர்களிடம் தானே அடிக்கடிப் பேசி உடல் நலத்தை விசாரிக்கிறார். அவசியமில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றும் அவர்களிடம் கூறிவிட்டார் முதல்வர்” என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
**-வேந்தன்**�,”