பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 3 ஆம் தேதி, லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் லேவில் உள்ள ராணுவ பொது மருத்துவமனைக்கு சென்று அங்கே சீனாவுடனான சண்டையில் காயம்பட்ட ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுபற்றிய புகைப்படங்களும் வெளிவந்தன. இந்நிலையில், மோடி சென்றது லேவில் இருக்கும் பொது மருத்துவமனை மாதிரி தெரியவில்லை என்று சமூக தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக காங்கிரஸார் சமூக தளங்களில் இதுகுறித்து விமர்சித்தனர். காங்கிரஸின் தேசிய ஊடகப் பிரிவைச் சேர்ந்த அபிஷேக் தத், “இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள்.இது ஒரு மருத்துவமனை போலவே தெரியவில்லையே? கருத்தரங்கக் கூடம் மருத்துவமனையை போல மாற்றப்பட்டிருக்கிறது. டாக்டருக்கு பதில் போட்டோகிராபரே இருக்கிறார். படுக்கைகளில் மருந்துகளோ, மருத்துவக் கருவிகளோ, தண்ணீரோ எதுவுமில்லையே?” என்று கேள்விகளை எழுப்பியிருந்தார். இது சமூக தளங்கள் மிகப்பெரும் வீச்சில் கேள்விக் கணைகளாக எழுந்தது.
இதையடுத்து இந்திய ராணுவம் இன்று ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதில்,
“பிரதமர் மோடி வந்து பார்வையிட்ட மருத்துவமனை வசதியின் நிலை குறித்து சில பகுதிகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நமது துணிச்சலான ஆயுதப்படைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் அபிப்ராய பேதங்கள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஆயுதப்படைகள் தங்கள் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன.
இந்த 100 படுக்கைகளுடன் உள்ள மருத்துவ வசதி, நெருக்கடி காலத்தில் விரிவாக்கப்பட்டதில் ஒரு பகுதியாகும், இது பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியாகும். கோவிட்-19 நெறிமுறைகளின் படி பொது மருத்துவமனையின் சில வார்டுகளைத் தனிமைப்படுத்தும் வசதிகளுடையதாக மாற்ற வேண்டும். எனவே, பொதுவான பயிற்சி ஆடியோ வீடியோ ஹால் ஆகப் பயன்படுத்தப்பட்ட அரங்கம், ஒரு வார்டாக மாற்றப்பட்டது, ஏனெனில் இந்த மருத்துவமனை கோவிட் சிகிச்சைக்கான மருத்துவமனையாகவும் செயல்பட்டது.
கோவிட் பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கால்வானில் இருந்து வந்ததிலிருந்து காயமடைந்த வீர்ர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமை இராணுவத் தளபதி ஜெனரல் எம். எம். நாரவனே மற்றும் ராணுவத் தளபதியும் அதே இடத்தில் காயமடைந்த வீரர்களை பார்வையிட்டனர்” என்று ராணுவம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
**-வேந்தன்**�,