இ-பாஸை ரத்துசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பணம் அளிப்பவர்களுக்கும் தாராளமாக கிடைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால், இ-பாஸ் நடைமுறையை இப்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என முதல்வர் கைவிரித்துவிட்டார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று (ஆகஸ்ட் 11) வெளியிட்ட அறிக்கையில், “ இ-பாஸ் நடைமுறை, தமிழகத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது.ஆனால், இப்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக்கப்பட்டுள்ளது. வேலை, தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்குள்ளேயோ, வெளியேயோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்குக் கூட இ-பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாவதாகவும், சிலர் குறுக்கு வழியில் ஊழல் செய்து இ-பாஸ் வழங்க முயற்சிப்பதும், போலி இ-பாஸ் வழங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன என்றும் தெரிவித்த முருகன் அவர், “கணவன் மனைவி சந்திக்க முடியாத நிலை, பெற்றோர் – பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை என்று இது போன்று எண்ணற்ற உறவுகள், இ-பாஸ் முறையால் அவதிக்கு உள்ளாகும் குமுறல்கள் நமக்கு செய்தியாக வந்து சேர்கின்றன” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “மேலும் இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் முறை கிடையாது. எனவே, மக்கள் படும் சிரமத்தைக் கருதி, தமிழ்நாடு அரசு, தமிழகத்திலும் இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**�,