பாஜகவில் இருந்து வந்த அர்ஜுன்மூர்த்தியை தான் ஆரம்பிக்கும் கட்சிக்கு நிர்வாகியாக நியமித்துள்ளார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்து, அதுபற்றிய அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடுவோம் என்ற தகவலை பதிவிட்டிருந்தார். உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரமாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு மிகப்பெரிய பணிகள் நடைபெற வேண்டியுள்ளதுதான் தாமதத்திற்கு காரணம் என விளக்கினார் ரஜினிகாந்த். கட்சிப் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாகத் தெரிவித்த அவர், “கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்திருக்கிறேன். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன்மூர்த்தி நியமிக்கப்படுகிறார்” என்ற முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் அர்ஜுன்மூர்த்தி சில நாட்களுக்கு முன்பு வரை பாஜகவில் இருந்தவர் என்ற தகவலும் வெளிவரத் துவங்கியது. பாஜகவின் அறிவுஜீவிப் பிரிவின் தலைவராக இருந்துவந்த அர்ஜுன் மூர்த்தி, வேல் யாத்திரை போராட்டங்களிலும் தீவிரமாக கலந்துகொண்டார். கடைசியாக கடந்த நவம்பர் 27ஆம் தேதி பாஜகவின் பொதுச் செயலாளராக சி.டி.ரவி பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் பாஜகவிலிருந்து விலகி ரஜினியுடன் கைகோர்த்துள்ளார். பாஜகவின் அறிவுஜீவிப் பிரிவின் தலைவர் என்று வைத்திருந்த ட்விட்டர் பயோவை, தற்போது தலைவருடன் இருக்கிறேன் என Now with Thalaivar என்று மாற்றியுள்ளார் அர்ஜுன்மூர்த்தி. அத்துடன் தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போது பாஜகவைச் சேர்ந்தவரையே நிர்வாகியாக நியமித்தது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணிச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி, “ரஜினியின் முடிவிற்கு பின்னால் பாஜகவின் தூண்டுதல் இருக்கிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் அரசியல், ஆட்சி மாற்றம் இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லை தான். ஆனா பாஜகவின் மனசாட்சியாக ரஜினி இருக்க நினைத்தால் மக்களின் மனசாட்சி வேற மாதிரி இருக்கும்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
**எழில்**�,