ரஜினி கட்சி ஆரம்பிக்கவுள்ளதற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் அரசியல் கட்சியைத் துவங்கவுள்ளதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அறிவிப்பை வரும் 31ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் கூறினார். அத்துடன் அரசியல் கட்சிக்கான மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனை நியமித்தார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இவர் பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் தலைவராக இருந்தவர்.
ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். ரஜினியின் வரவு நல்வரவாகட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, எதிர்வரும் காலங்களில் அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற பதிலை சொல்லிவிட்டுச் சென்றார் துணை முதல்வர். அதாவது, ரஜினிகாந்த்துடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் கருத்து கேட்கப்பட்டது. ஆனால், நடிகர் ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு விவரத்தை முழுமையாக அறியாமல் அது பற்றி பேச விரும்பவில்லை என்று முதல்வர் கூறினார். அதே சமயம் ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பால் மாநிலத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
**எழில்**�,