அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப் பொருள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2, 500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பொங்கல் பரிசு டோக்கனை ரேஷன் பணியாளர்கள் மூலமாக வழங்காமல், தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் மூலம் வழங்குவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், , அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்கிற எண்ணத்தில் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க திமுக சூழ்ச்சி செய்வதாக முதல்வர் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் பொங்கல் பரிசு டோக்கன் அதிமுகவினர் மூலம் வழங்கப்படுவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல் செய்தது. அதில் அதிமுக சின்னம், அமைச்சர்கள் புகைப்படம் இன்றி டோக்கனை விநியோகிக்க வேண்டுமென வலியுறுத்தியது.
இவ்வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “இரண்டு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்கள் படம் இடம்பெற்ற டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. மற்ற அனைத்து இடங்களிலும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது” என்ற தகவலைத் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நாளை மாலை 5 மணிக்குள் இதுதொடர்பான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமெனவும், அது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்று சேர்ந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவை பிறப்பித்தனர். அப்படி சுற்றறிக்கை பிறப்பிக்கவில்லை என்றால் திமுக நீதிமன்றத்தை நாடலாம் எனவும் கூறினார்.
**எழில்**�,