கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்ற தன்னுடைய முடிவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கடந்த 3ஆம் தேதி அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால், ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் என்றபோதிலும் சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக மூன்று நாட்கள் ஹைதராபாத் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று சென்னை போயஸ் இல்லத்துக்குத் திரும்பினார். இந்த நிலையில் தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என அறிவித்து, தன்னை நம்பியவர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்த்த தலைவர்கள் பலரும், உடல்நலம் கருதி அவர் எடுத்த இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இனி நடிகராக ரஜினியை தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள் என அவரை கடுமையாக விமர்சித்த சீமான் வரவேற்றார்.
ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, ரஜினி மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், அவரின் முடிவுக்கு யாரும் எதிர் கருத்தோ விமர்சனங்களோ வைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார். இந்த நிலையில் கட்சி ஆரம்பிக்கவில்லை என்ற அறிவிப்பை ரஜினி வெளியிட்ட பிறகு அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்…
மருத்துவர்கள் ரஜினிகாந்தை கட்டாயம் ஓய்வெடுக்கச் சொல்லியுள்ளதால் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய முடிவு தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என உற்று நோக்கி வருகிறார். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் ரஜினியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ரஜினியுடன் இணக்கமாக பணியாற்றும் சூழல் உருவாக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் நேற்று கருத்து தெரிவித்தார். இதனைப் பார்த்த பிறகு சிதம்பரத்திற்கு போனில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். இதுபோல தனக்கு ஆதரவாக கருத்து சொன்னவர்களை அழைத்து நன்றி சொல்லி வருகிறார் என்கிறார்கள்.
**எழில்**�,