புதுச்சேரியில் திமுகவின் முதல்வர் வேட்பாளராக பரபரப்பாக பேசப்படும் ஜெகத்ரட்சகன் எம்பி தலைமையில் மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜனவரி 18) நடக்கிறது. கூட்டம்
காலை 11 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜெகத்ரட்சகன் தாமதமாகத்தான் இந்தக் கூட்டத்துக்காக புறப்பட்டிருக்கிறார்.
ஜெகத்ரட்சகனுக்கு அரசியலில் மிகப்பெரிய மைல்கல் சந்தர்ப்பமாக புதுச்சேரியின் முதல்வராகக் கூடிய பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தீவிர கடவுள் நம்பிக்கையும் ஜோதிடப் பற்றும் கொண்டவர் ஜெகத்ரட்சகன். இன்று திங்கள் கிழமை காலை7.30 முதல் 9 மணி வரை ராகுகாலம். 10.30 முதல் 12 மணி வரை எமகண்டம். எனவே 12 மணிக்கு மேல்தான் இந்த கூட்டத்துக்காக புறப்பட்டார் ஜெகத்ரட்சகன்.
தன் வீட்டில் இருந்து கடவுளை வழிபட்டுவிட்டு புறப்பட்ட ஜெகத்ரட்சகன், புதுச்சேரியின் சனிமூலையாக கருதப்படும் காலாப்பட்டு செல்வ விநாயகர் கோயிலுக்கு 12 மணிக்கு மேல் சென்று வழிபட்டார். பின் அங்கிருந்து கூட்டம் நடக்க இருக்கும் மண்டபத்துக்குப் புறப்பட்டிருக்கிறார்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசின் கெடுபிடிகளைத் தாண்டி ஆயிரக்கணக்கான திமுகவினர் புதுச்சேரியில் திரண்டிருக்கிறார்கள். திமுக கொடிகளை கட்டிக் கொண்டு வந்தால் போலீஸ் தடுத்து நிறுத்துகிறது என்பதால்.. கம்புகளோடு கொடிகளை சுருட்டி வைத்துக் கொண்டு புதுச்சேரி நகரத்தை அடைந்து, அதன் பின் கொடிகளை டூவீலர்களில் கட்டிக் கொண்டார்கள் திமுகவினர்.
விநாயகர் தரிசனத்துக்குப் பிறகு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பேரணியாக புறப்பட்டு நிர்வாகிகள் கூட்டத்துக்கு செல்கிறார் ஜெகத்ரட்சகன். புதுச்சேரி நகரத்தில் எங்கு பார்த்தாலும் திமுக கொடிகளும், திமுகவினரின் டூ வீலர்களும், கார்களுமாகவே இருக்கிறது.
**-வணங்காமுடி**�,