காற்று மாறி வீசுகிறது – வெற்றிவேல் வீரவேல்: மோடி பிரச்சாரம்!

politics

அரசு சார்பில் புதிய நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் பாஜக பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று புதுச்சேரி மற்றும் கோவைக்கு வருகை தந்தார்.

இன்று காலை டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்ற அவர் அங்கிருந்து தனி விமானத்தில் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “புதுவையின் தெய்வீகத்தன்மை என்னை மீண்டும் ஒருமுறை இந்தப் புனித பூமிக்கு வரவழைத்துள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளைக் கொண்டதாகப் புதுவை உள்ளது பன்முகத் தன்மையின் அடையாளமாக இந்த இடம் உள்ளது. மக்கள் 5 மொழிகள் பேசுகிறார்கள், வெவ்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள், ஆனாலும் ஒன்றாக வாழ்கிறார்கள். ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், புரட்சியாளர்களின் வசிப்பிடமாகப் புதுச்சேரி திகழ்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொருளாதார வளத்திற்கும், நல்ல உடல்நலனிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதால், உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகக் கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  வரும் ஆண்டுகளில் சுகாதாரம் முக்கிய துறையாகச் செயல்படும். அனைவருக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்கும் நோக்கத்தோடு ஜிப்மரில் ரத்த மையம் தொடங்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் ரத்தம், ரத்தம் சார்ந்த பொருட்கள், குருத்தணுக்களைச் சேமிக்கும் வங்கிகளுக்கு நீண்டகால சிறந்த வசதிகள் கிடைக்கும். இந்த மையம், ஆராய்ச்சி ஆய்வகமாகவும், ரத்த மாற்றத்துடன் தொடர்புடைய அனைத்து அம்சங்களில் பயிற்சி பெறுவோருக்கான பயிற்சி மையமாகவும் விளங்கும்.

புதுச்சேரியின் மக்கள் திறமையானவர்கள். இது மிகவும் அழகான பகுதி. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எனது அரசின் சார்பாக அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்ற உறுதியைத் தனிப்பட்ட முறையில் வழங்குவதற்காக இங்கு வந்துள்ளேன்” என்று கூறினார்.

“புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர்,  ”காங்கிரஸ் பிரிவினைவாத அரசியலை செய்கிறது, பொய் சொல்வதில் கைதேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.  2016ஆம் ஆண்டில் வாக்களித்த புதுச்சேரி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டது. அடுத்து அமையப் போகும் பா.ஜ.க அரசு மக்கள் விரும்பும் ஆட்சியைக் கொடுக்கும் புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது முதல் தேர்தல் வாக்குறுதி” என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

புதுச்சேரி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர், அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் கொடிசியா மைதானத்துக்கு சென்றார். அங்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

பின்னர், பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி, திறந்து வைத்தார். நெய்வேலியில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனில் வடிவமைக்கப்பட்ட தலா 500 மெகாவாட் திறன் கொண்ட லிக்னைட் அடிப்படையிலான  புதிய அனல்மின் திட்டத்தை      நாட்டுக்கு அர்ப்பணித்தார். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 708 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் வெற்றிவேல் வீரவேல் என தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி என்பது கருணை மிகுந்த ஆட்சியாகும். ஆனால், எதிர்க்கட்சிகள் கருணையற்ற ஆட்சியை நடத்தவே விரும்புகின்றனர் என்று கடுமையாக சாடினார்.

 ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா என்று குறிப்பிட்ட பிரதமர், தி.மு.க வும் காங்கிரஸும் ஊழலில் ஊறித் திளைத்த கட்சிகள்  என்றும் சட்டைப் பையை நிரப்பிக் கொள்ளவே, தி.மு.க – காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறது

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாவட்டம் தோறும் சமூக விரோதிகளை உருவாக்கி மக்களுக்குத் தொந்தரவு கொடுப்பார்கள் என்றும்  விமர்சித்தார்.

**-பிரியா** �,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *