uபார்ட்டி தான் வேறு பாலிசி ஒன்றுதான்: சீமான்

politics

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமான் இன்று ( ஏப்ரல் 1) அண்ணா நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “அதிமுக, திமுகவும் வேறு வேறு இல்லை. அதிமுக கட்சியில் அண்ணா படம் இருக்கிறது, திமுகவில் அது இல்லை. கொள்கை மாற்றம் எதுவும் கிடையாது. இரண்டு கட்சியிலும் ஊழல் இருக்கிறது. இரு கட்சி ஆட்சியாளர்களுக்குமே சாராய ஆலை இருக்கிறது. பெரிய மாறுதலை எதிர்பார்க்க முடியாது. இப்படிதான் பாஜகவும், காங்கிரஸும். இவர்களுக்கு பார்ட்டி தான் வேறு பாலிசி ஒன்றுதான்.

சிஏஏ, நீட், ஜிஎஸ்டி, என்ஐஏ என அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ், அதைச் செயல்படுத்தியது எல்லாம் பாஜக. இதற்கு என்ன மாற்று உள்ளது. இதேதான் திமுகவும், அதிமுகவும். கொள்ளை என்பது தான் இவர்களுக்குக் கொள்கை.

யார் சீக்கிரம் இந்தியாவை விற்பது என்பதுதான் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள போட்டி, இதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சந்தை பொருளாதாரம் இருக்கும் வரை இந்தியா முன்னேறாது. சந்தை பொருளாதாரம் இருக்கும் வரை இவர்களுக்கு உயிரும் ஒரு பொருள்தான்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஒரு நரி, குளிர்காலத்தில் கம்பளி தருகிறேன், என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுங்கள் என்று செம்மறி ஆடுகளிடம் கேட்கிறது. இதற்கு ஆடுகளும், நம்முடைய முடியை எடுத்துத்தான் கம்பளி செய்வார்கள் என்று தெரியாமல் தலை ஆட்டுகின்றன. அதுபோன்று தான் இந்த 1000 மற்றும் 1500 ரூபாய் கணக்கும். மக்கள் பணம்தான் மக்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்று தெரிவதில்லை” என்றார்.

50 ஆண்டுகளாக அவர்களை நம்பி ஏமாந்துவிட்டார்கள். 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்படி 1000 ரூபாய் கொடுப்பார்கள் என்று கேட்க வேண்டாமா?

மிக்ஸி, கிரைண்டர் என்பது அடிப்படைத் தேவை. அதை தேவைப்படுபவர்களால் வாங்கிக் கொள்ள முடியும். அதுவே, மருத்துவமனை கட்டி வைத்தியம் பார்க்க முடியாது, மின் உற்பத்தி நிலையம் அமைத்து மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது, பள்ளி கல்லூரிகளைக் கட்டி படிக்க முடியாது. இதைத்தான் வரி பணம் மூலம் அரசு செய்து கொடுக்க வேண்டும். கல்வியை தரமாகக் கொடுத்து, அதற்கு வேலை கொடுத்து, சம்பளம் கொடுத்தால் நம்மால் மிக்ஸி, கிரைண்டரை வாங்கிக் கொள்ள முடியாதா?

மக்களின் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்த வேண்டும் அதுதான் ஆட்சி. மீனவர்கள், விவசாயிகள் மருத்துவர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் எல்லோரும் வீதிக்கு வந்து போராடுகின்றனர். ஆனால் நல்லாட்சி செய்துகொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக ஊதியம் வாங்கும் எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்தில் தான் இருக்கின்றனர். 6 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்குக் கடன் உள்ளது. ஆனால் இலவசம் அறிவிக்கின்றனர். எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியம் உயர்வு கொடுக்கின்றனர். எனவே இந்த தேர்தலை மாறுதலுக்கான ஒரு தேர்தலாக இருக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று வாக்கு சேகரித்தார் சீமான்

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *