கொரோனா பரவல் கைமீறி சென்றுவிட்டதா?: ராதாகிருஷ்ணன்

politics

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று நடைபெற்ற அரியர் வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், நீதிமன்றங்களில் எந்த மாதிரியான தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகளை வழங்கத் தமிழக அரசு தயாராக உள்ளதா என்றும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று மதியம் தலைமை நீதிபதியைச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தலைமை நீதிபதி கேட்ட விவரங்களைக் கொடுத்திருக்கிறோம். நாளை தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் கோர் கமிட்டி கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தவுள்ளோம். கொரோனா தொற்று 8 ஆயிரமாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுப்பது, 10 ஆயிரமாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

தடுப்பூசியைத் தீவிரப்படுத்துவது, பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். யார் யாரெல்லாம் வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்புள்ளதோ அவர்களை அதைச் செய்யுமாறு கேட்டுள்ளோம். இவற்றை எல்லாம் தலைமைச் செயலாளர் கமிட்டி மூலம் முதல்வரிடம் அளித்துச் செயல்படுத்தவுள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும், அரசு தலைமை வழக்கறிஞர் இந்திய அளவிலான கொரோனா பாதிப்பைத் தான் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். அவர் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை” என்றும் குறிப்பிட்டார் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

கொரோனா சங்கிலியை உடைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *