|டாஸ்மாக் கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

politics

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்தமுறை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் ஏன் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

அதுபோன்று, கொரோனா நோய் பரவல் அதிகமாக இருப்பதால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் குறைக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கமான டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திருச்செல்வன் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து மின்னம்பலத்தில்[தொழிற்சங்க அழுத்தம்: டாஸ்மாக் கடைகள் நேரம் குறைப்பு?](https://minnambalam.com/politics/2021/04/10/46/corona-spread-2nd-wave-tasmac-shops-time-will-reduce-chief-seceratary) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. வழக்கமாக, மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும். புதிய கட்டுப்பாடுகளின்படி, நாளை முதல் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகளில் கூட்டநெரிசல் இருக்கக் கூடாது. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். கடையின் முன்பு சமூக இடைவெளியை குறிக்கும்படி குறைந்தது 5 வட்டங்கள் வரைந்திருக்க வேண்டும்.

மதுக்கடைக்குள் 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.

டாஸ்மாக் கடையை ஒருநாளைக்கு இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தது இரண்டு பணியாளர்கள் கடையின் முன்புறம் நின்று வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதையும், முகக்கவசம் அணிந்து வருவதையும் உறுதி செய்ய வேண்டும். கடையின் அருகில் மது அருந்துவதையும், பொது இடங்களில் மது அருந்துவதையும், அதிக கூட்டம் சேராமலும், கடை பணியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதுக்கடை பணியாளர்கள் மூன்றடுக்கு முகக்கவசம், கையுறைகள் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மதுபானம் விற்பனையை பாதிக்காத அளவு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் விற்பனையை அதிகரிக்கவும், அனைத்து கடைகளிலும் மதுபானங்கள் அதிக அளவு இருப்பு வைக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *