தமிழகத்தில் காலை 8 மணிக்கே வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், சில தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணி தாமதமாகியுள்ளது.
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 வாக்கு எந்திரங்கள் பழுதாகி உள்ளன. அதுபோன்று துறைமுகம் தொகுதியில் பழுது அடைந்த 2 வாக்குப் பெட்டிகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் டாக்டர் எழிலனும், பாஜக சார்பில் குஷ்புவும் போட்டியிடும் ஆயிரம்விளக்கு தொகுதியில் இரண்டாவது சுற்று எண்ணிக்கையின் போது 7,8 கன்ட்ரோல் யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டு வாக்கு எண்ணிக்கை சில நிமிடங்கள் தாமதமானது.
திருச்சி மாவட்டத்தின் கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை அதிகாரி தாமதமாக வந்ததால், அப்பகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியுள்ளது.
பண்ருட்டி தொகுதியில் காலையிலிருந்தே தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் மெத்தனமாக தொடங்கப்பட்டன. காலை உணவு வழங்கபடாததால், தபால் வாக்குகள் எண்ணப்படாமலேயே இருந்ததாகவும், தற்போதுதான் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான பணி தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
**-அபிமன்யு**�,