கொரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே என தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையான இடங்களை பெற்ற திமுக கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மே 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கவுள்ளார். பதவியேற்பதற்கு முன்னதாகவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்தும், ஊரடங்கு குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பத்திரிகையாளர்களும் முன்கள பணியாளர்கள்தான் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள மம்தா பானர்ஜி நேற்று, களத்தில் நின்று மக்களுக்காக பணியாற்றும் பத்திரிகையாளர்களும் முன்கள பணியாளர்கள்தான் என்று அறிவித்தார்.
அதுபோன்று, தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்கள் என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன. கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
**வினிதா**
.�,