பெண்களைப் போன்று திருநங்கைகளும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்றே அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அரசாணையில் கையெழுத்திட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று(மே 8) முதல் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பேருந்துகளில் ” மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை” என்ற ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த திட்டம் பெண்களிடையே, குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இலவச பயணத்தின் மூலம் மாதத்துக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை சேமிக்க முடியும் என வேலைக்கு செல்லும் பெண்கள் கூறுகின்றனர்.
இந்துஜா ரகுநாதன், ”பெண்களுடன் திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், திருநங்கைகளும் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-வினிதா**
.�,