புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரையில் இல்லாத ஒரு பதவியை உருவாக்க புதிய சட்டத்தை பாஜக கொண்டு வர இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் அதிமுக பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலைச் சந்தித்தது. என்.ஆர்.காங்கிரஸ் பத்து தொகுதிகளும், பாஜக ஆறு தொகுதிகளும் பிடித்து ஆட்சி அமைத்தது. முதல்வராக ரங்கசாமி நேற்று (மே 7) பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பாஜக பிரமுகரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான கிஷான் ரெட்டி, “துணை முதல்வர் உட்பட மூன்று அமைச்சர்கள் பதவி பாஜகவுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, மூன்று நாட்களுக்கு முன்பு சேலம் அப்பா பைத்திய சாமி கோயிலுக்குச் சென்ற முதல்வர் ரங்கசாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ”புதுச்சேரியில் இதுவரையில் துணை முதல்வர் பதவி என்பது ஒன்று இல்லை. அதற்கான மத்திய அரசு வழிகாட்டுதலும் ஒப்புதலும் இல்லை. ஒருவேளை மத்திய அரசு கேட்டுக்கொண்டால் அதுகுறித்து பரிசீலிப்போம்” என்று தெரிவித்தார்.
முதல்வர் மட்டும் பதவியேற்று, அமைச்சர்கள் பதவியேற்காதது குறித்து நாம் விசாரித்ததில், “பாஜகவுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது. அதற்கான சட்டத்தையும் வழிகாட்டுதலையும் மத்திய உள்துறை அமைச்சகம்தான் ஆணையாகப் பிறப்பிக்க வேண்டும். அதற்குத்தான் காத்திருக்கிறோம்” என்றார்கள் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள்.
**-வணங்காமுடி**
�,